Colombo

Negombo Town Little Rome | நீர்கொழும்பு நகர வேட்டை

நீர்கொழும்பு என்பது கம்பஹா மாவட்டத்தின் ஓர் நகரப்பகுதி ஆகும். இது தனியாக அமைந்த மாவட்டம் போல் பல சிறப்பம்சங்களையும், வியாபார திறன்களையும், கடல் வளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது அது மட்டுமல்லாது போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் வருகையினால் இங்கு ஆயிரத்தி எழுநூற்று என்று சொல்லப்படும் ஆண்டுகளில் கட்டப்பட்ட தேவாலயங்களை அதிகமாகக் கொண்டுள்ளது.

நீர்கொழும்பில் இருக்கும் நீர்கொழும்பு வாவி என்பது கடலோரம் கடலின் உட்புறமாகவும் ஒரு சிறிய நிலப்பரப்பை பிரித்து காணப்படும் மிகப்பெரிய பரப்பாகும். அத்துடன் சேர்ந்ததாக பல உணவு விடுதிகளும் அவற்றை முகம் கொடுக்கக் கூடியவாறு பொழுதுபோக்கு இடங்கள் அமைந்துள்ளன. நீங்கள் அந்த வாவியில் சிறிய படகுகளில் அல்லது கட்டுமரங்களில் சவாரி செல்லலாம். அல்லது இடுப்பு மட்டம்,முழங்கால் மட்டம் நீர் இருக்கும் அதனுள் நடந்து செல்லக் கூடியதாகவும் இருக்கும். இதிலிருந்து சில்லென்று எழுந்து வந்து மோதும் காற்று ஆனது உணவு விடுதிகளில் இருந்து உணவு அருந்துவதற்கு மிகவும் சுகம் அளிப்பதாக உள்ளது.அது தவிர இரவு நேரங்களிலும் உணவு விடுதிகளில் அமர்ந்து உண்பது என்பது நீர்கொழும்பு வாவியை அனுபவிப்பதற்கு மிகவும் இதமாக உள்ளது.

நீர்கொழும்பு நகரை சுற்றிப் பார்க்கும்போது நகரங்களில் பல கடை தொகுதிகளையும் தேவாலயங்களையும் கடற்கரை ஓரமாக அமைந்த எஞ்சிய ஒரு கோட்டையையும் காணலாம் அதுமட்டுமல்லாது கட்டுநாயக்க வந்து செல்லும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட எண்ணற்ற விடுதிகளில் மிகவும் சுத்தமானதாகவும் தரமானதாகவும் உருவாக்கப்படுகின்ற உணவுகளைக் கொண்ட பாரிய உணவகங்களும் காணப்படுகின்றது. நமது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ரியோ ஐஸ்கிரீமும் இங்கு இருப்பது எமக்கு பெருமையான விடயம் ஒன்றாகும். வெயில் நேரங்களில் இங்கு குளிர்களி அருந்துவது என்பது இதமான ஒரு செயலாகும்.

நீர்கொழும்பில் சகல துறைகளிலும் வியாபாரங்களிலும் மூன்று இன மக்களும் பங்கு கொள்கின்றனர் இருப்பினும் தமிழ் பேசும் மக்களும் சிங்களவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருப்பது குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு விடயமாகும். இங்கு அமைந்துள்ள ஒரு தமிழ் தேசிய பாடசாலையையும் வீதியில் அமைந்துள்ள பல இந்துக் கோயில்களையும் காணலாம் எங்கு அதிகமாக தேவாலயங்கள் காணப்படுகிறதோ அங்கு முன்னைய காலத்தில் சைவக் கோயில்கள் இருந்துள்ளன என்பதும் இவ்வாறு மதங்கள் பரப்பப்பட்டன என்பதும் கண்கூடாக காணக்கூடிய ஒரு உண்மையாகும்.

எவ்வாறாயினும் கடல் வளம் மிக்க நீர்கொழும்பில் நீங்கள் செல்லும் வேளைகளில் நீர்கொழும்பு வாவிக்கரை, மற்றும் நீர்கொழும்பு மீன் சந்தை, நீர்கொழும்பு கருவாட்டு சந்தை, கருவாடு காயவிடப்படும் இடம், ஞாயிற்றுக்கிழமை சந்தை, தேவாலயங்கள், உணவகங்கள் என்பவற்றுக்கு சென்று வரக்கூடிய ஓர் சுத்தமான இடமாகும் என்றால் மிகையாகாது.