Colombo

New Manning Market | இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட மெனிங் சந்தை

பேலியகொடை பகுதியில் அமைந்த புதிய மேனிங் சந்தையானது இலங்கையில் அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான சந்தை கட்டட தொகுதி ஆகும். இச் சந்தை கட்டட தொகுதி 100 ஆண்டுகளுக்கு மேலாக புறக்கோட்டைப் பகுதியில் அமைந்திருந்தது நீங்கள் யாவரும் அறிந்ததே. 2020 ஆம் ஆண்டளவில் பேலிய கொடையில் இப்போது நீங்கள் கண்டு கொண்டிருக்கின்ற கட்டிடத் தொகுதி 25 ஏக்கர் பரப்பளவில் 446734 சதுரஅடி பரப்பளவு கொண்ட வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் புறத்தோற்றத்தை நோக்கும்போது ஒரு வளைவு, உயர்த்தப்பட்ட சாலை, இரண்டு தொகுதிகளுக்கு இடையான இணைப்புப் பாலம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் மரக்கறிகளும் பழங்களும் இங்கு வந்து குவிகின்றன. இது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இவ்வாறு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வந்து குவிகின்ற மரக்கறிகளும் பழங்களும் இங்கிருந்து கொழும்பு மாவட்டத்தின் ஏனைய சந்தைகளுக்கு மொத்த விற்பனையாளர்கள் மூலம் லாரி,வடி போன்ற வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றது. இரண்டு தளங்களைக் கொண்ட இச் சந்தை கட்டட தொகுதியானது கிட்டத்தட்ட 1200க்கும் மேற்பட்ட கடை தொகுதிகளைக் கொண்டுள்ளது. கீழ்த்தளத்தில் பலவகைப்பட்ட மரக்கறிகளும் மேல்தளத்தில் தனி பழமாக நிரம்பி வழிவது பார்ப்போரின் மனங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்று விடுகின்றது. வாங்குபவரும் விற்பவரும் தத்தமது வாகனத்தை நிறுத்தி செல்வதற்கான மிகப்பெரிய வாகனத் தரிப்பிடத்தை தனது வளாகத்தின் உள்ளேயே கொண்டுள்ளது.

நாங்களும் சந்தைக் கட்டடத் தொகுதிக்கு சென்றபோது சில்லரையாக மரக்கறிகளையும் மேல் தளத்திற்குச் சென்று பலவகையான பழங்களையும் வாங்கி இருந்தோம். நீங்களும் விடுமுறை நாட்களில் அல்லது சனி ஞாயிறு போன்ற தினங்களில் செல்வீர்கள் ஆனால் உங்கள் மனம் போன போக்கில் பலவகையான மரக்கறிகளையும் பழங்களையும் விருப்புடன் வாங்கிச் செல்லலாம். இவை பார்ப்பதற்கு மிகவும் சுத்தமாகவும் புதியதாகவும் இருப்பது குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒரு விடயமாகும். திருவிழாவிற்கு சென்ற சிறு குழந்தைகள் மிட்டாய்களை கண்டவுடன் வாங்கும் ஆர்வத்துடன் பார்ப்பது போன்று பெரும் ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் நான் சந்தைக் கட்டிடத் தொகுதியை சுற்றி வந்தேன். மேலும் கூறுவதாயின் வெளிநாடுகளுக்கு நிகரான கட்டட அமைப்பையும் சுத்தத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் இலங்கையில் வாழும் ஒரு பிரஜையாக இருந்தாலும் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் பிரயாணிகளாக இருந்தாலும் கூட இவ்விடம் நீங்கள் ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய, வாங்கி மகிழ வேண்டிய இடமாகும்.